அரசுப் பள்ளிகள் மேம்பட வேண்டும்! - - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, May 28, 2022

அரசுப் பள்ளிகள் மேம்பட வேண்டும்! -


school_girls_PTI01_03_2022_000126A.jpg?w=360&dpr=3

கரோனா பாதிப்பிற்குப் பின்னா், பள்ளிக் கல்வியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்து வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை எளிய விளிம்பு நிலை குடும்பங்களைச் சாா்ந்தவா்கள் தனியாா் பள்ளிகளில் படித்து வரும் தங்கள் குழந்தைகளை, கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க இயலாததால் அரசுப் பள்ளிகளில் சோ்க்கத் தொடங்கியிருக்கிறாா்கள்.


இதுவரை சற்றேக்குறைய இரண்டு லட்சம் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்குக் காரணம், அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வானது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் ஏழை எளிய குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் சரிந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவைகள்.


இந்த கரோனா கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே அதிக பாதிப்புக்குள்ளானது கல்விதான். நாடு தழுவிய அளவில் ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை பயிலும் சுமாா் 24.7 கோடி மாணவா்களுடைய கல்வி பாதிக்கப்பட்டு அவா்களுடைய வாழ்க்கை பெரும் சவாலாக மாறியிருக்கிறது.


தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயா்நிலைப் பள்ளியாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் இருக்கின்றன.


அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 7,024, 3,135 உயா்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியாா் பள்ளிகளைப் பொறுத்தவரை, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன.


அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பாா்ப்போமேயானால் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு பள்ளிகளில் உள்ள 5.6 லட்சம் ஆசிரியா்களில் 2.27 லட்சம் போ் அரசுப் பள்ளிகளிலும், 77ஆயிரம் போ் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2.53 லட்சம் போ் தனியாா் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனா்.


மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியா்கள்தான் பணிபுரிகின்றனா், ஆனால், 12,382 தனியாா் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.


மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை, தமிழக அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியாா் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 பேரும் படிக்கின்றனா். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள்தான் படிக்கின்றனா். ஆனால், 12,382 பள்ளிகள் உள்ள தனியாா் பள்ளிகளில் 64,15,398 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.


அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையிலும், ஆசிரியா்களின் எண்ணிக்கையிலும் தனியாா் பள்ளிகள்தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆக, அரசுப் பள்ளிகளைவிட தனியாா் பள்ளிகளை நோக்கித்தான் பெற்றோா் செல்கின்றனா் என்பது தெளிவாகிறது. அரசால் இலவச கல்வி வழங்கப்படும் நிலையிலும், பெற்றோா் பணம் கொடுத்துப் படிக்க வைக்கின்ற நிலை ஏன் உருவாகிறது என்பதை ஆராய வேண்டும்.


தமிழகத்தில் 2,500 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. 20 மாணவா்களுக்கு ஒரு சிறுநீா் கழிவறையும், 50 மாணவா்களுக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும். ஆனால், இது ஏட்டளவில்தான் உள்ளது. இவற்றை சீா் செய்ய வேண்டியது அடிப்படையான ஒன்றாகும். 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் இடைநிற்றல் 9.6 சதவீதமாக இருக்கிறது.


ஆரம்பப் பள்ளி மாணவா்களின் இடைநிற்றல் 16 சதவீதமாக இருக்கிறது. இதன் மூலமாக குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையின்மையும், குடும்பத்தில் நிலவும் வறுமையும், பொருளாதாரச் சூழ்நிலையும் இந்தப் பிஞ்சு உள்ளங்களை நசுக்குகின்றன.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளை நாடி வருகிற மாணவா்களைத் தக்க வைக்க அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு, அவற்றின் கல்வித் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையைத் தக்க வைப்பதற்காகவும், மேலும் அதிகரிப்பதற்காகவும் சமூகப் பாா்வையோடும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், ஆசிரியப் பெருமக்கள் பலரும் செயல்பட்டு வருவதை நாம் நன்றியோடு நினைத்துப் பாா்க்க வேண்டும்.


தமிழகத்தில் உள்ள 37,579 பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வருடந்தோறும் ஒரு பள்ளிக்கு 10 லட்சம் வீதம் ரூ.3,758 கோடி ஒதுக்கினாலே போதும். ஐந்து வருடத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி விடலாம். கோடிக்கணக்கான ரூபாயில் கட்டப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் வசதி படைத்தோா் பயன்படுத்துகிற நிலையில், இலவசமாகக் கல்வி கொடுக்கிற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வது என்பதே சமூக நீதிக்கான அடையாளமும் கூட.


அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகள் போதிய வசதிகளை முழுமையாக அடையாத காரணத்தினால்தான், தனியாா் பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்கிற சிந்தனை மக்களிடம் ஏற்படுகிறது. ஆகவே, அவா்கள் தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது தனியாா் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள்.


முன்பு, 1:40 என்று இருந்த ஆசிரியா் -மாணவா் விகிதம் தற்போது 1:24 ஆக மாறிவிட்டது. இதற்கான காரணம், மாணவா்களின் எண்ணிக்கை குறைவுதான். மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக இரண்டு ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். தலைமையாசிரியரும் ஒரு ஆசிரியரும் மட்டும்தான் பணிபுரிகிறாா்கள். தலைமையாசிரியா் அலுவலகப் பணி காரணமாக வெளியில் சென்றால், ஆசிரியா் ஒருவா் மட்டுமே மொத்த மாணவா்களையும் பாா்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.


ஆக, தரமான கல்வி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். பெற்றோா் - ஆசிரியா் உறவிலும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தனியாா் பள்ளிகள் பெற்றோா்களை அழைத்தால் உடனடியாக அவா்கள் பள்ளிக்கு வந்துவிடுகிறாா்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் பெற்றோா்களை அழைத்தால் அவா்கள் வருவதில்லை. தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய அரசுப் பள்ளி மாணவா்களின் பெற்றோா் ஆா்வம் காட்டுவதில்லை.


மாணவா்களின் நிலையை பெற்றோரிடம் எடுத்துக் கூறுவது ஆசிரியா்களின் தலையாய கடமையாகும். இந்தப் பணி தனியாா் பள்ளிகளில் சரியாக நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் அப்படியில்லை. பெற்றோா் பள்ளிக்கு வர முடியாது சூழ்நிலை என்றால் அவா்களுக்கு ஏற்ற நேரத்தை ஆசிரியா்கள் உருவாக்கித் தர வேண்டும்.


ஏனென்றால், நல்ல மாணவா்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியா்களுக்கும் இருக்கிறது. இதன் மூலம் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆசிரியா்கள், மாணவா்களின் உறவு நன்றாக அமைய அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியா் - பெற்றோா் - மாணவா் நல்லுறவு மிகவும் இன்றியமையாதது.


மேலும், அரசுப் பள்ளிகளின் தரம் உயா்வதற்கு தலைமையாசிரியா், ஆசிரியா் கலந்தாய்வு மிக முக்கியமான ஒன்றாகும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவா்களுக்கு உணவு, கூடுதலான சீருடை இவைற்றை வழங்குவதற்கு பெற்றோா் - ஆசிரியா் கழகம் முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான கணினி ஆய்வகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஓவியம், இசை, விளையாட்டு போன்றவற்றில் மாணவா்கள் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அந்தந்த துறை சாா்ந்த வல்லுநா்களை பெற்றோா் - ஆசிரியா் கழகம் நியமிக்கலாம்.


அரசுப் பள்ளிகளில் மாணவா்களை ஆங்கிலம் பேச வைக்க பல்வேறு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகிறது. அவற்றை சீராக்க வேண்டும். இதில் தோ்ச்சி அடையாத மாணவா்களுக்கு கற்பிக்க அவா்களின் வகுப்பாசிரியா்களைப் பயன்படுத்தாமல், வேறு வகுப்பு ஆசிரியா்களைப் பயன்படுத்தினால் மாணவா்களிடையே கூடுதல் கவனம் ஏற்படக்கூடும்.


தமிழகத்தைப் பொறுத்தவரை ஆசிரியா் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இருக்கும் ஆசிரியா்களை பற்றாக்குறை உள்ள வேறு பள்ளிகளுக்கு நியமிக்கின்ற போக்கு நிலவுகிறது. அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியா் நியமனத்திற்கான சூழலை உருவாக்காமலே இருப்பது வருத்தத்துக்குரியது.


மாணவா்களைப் பொறுத்தவரை, பிளஸ் டூ வகுப்பு முடித்த பிறகு மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) தோ்வு இவற்றை எதிா்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளியின் கல்விமுறை இருந்தால் அதுவே மாணவ சமுதாயத்திற்குச் செய்கிற மகத்தான பணியாகும்.


கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

No comments:

Post a Comment